புத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ
- நூலின் பெயர் : இதயத்தில் ஹைக்கூ,
- நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
- மதிப்புரையாளர் : கவிஞர் மு.அர்ச்சுனன்
பகட்டு இல்லாத கவிதைகள் காலம் காலமாக மாறிவந்துள்ள தமிழ்க்கவிதை வடிவத்தில் ஒரு
சிறப்பான வடிவம் ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவமான “ஹைக்கூ” வை முதன் முதலில்
அறிமுகம் செய்தவர் சுப்பிரமணிய பாரதியார். பாரதியாரின் புகழ்பெற்ற “அக்கினிக்
குஞ் சொன்று கண்டேன்” என்ற கவிதை ஹைக்கூ மாதிரியான சிறிய வடிவத்தில் எழுதப்பட்ட
கவிதைதான். பாரதிதாசனும் இதேபோன்ற சிறிய வடிவக் கவிதைகளை தனது “அழகின் சிரிப்பு” என்ற நூலில் நிறையவே முயற்சி செய்துள்ளார். அதற்குப் பிறகு இன்று வரை
“ஹைக்கூ” கவிதைகளை எழுதுவதற்கான பல கவிஞர்கள் தமிழில் ஏராளமானோர்
வந்துவிட்டனர். இதில் கவிஞர் இரா.இரவிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.
ஹைக்கூவிற்கு மூன்று வரிகள் வேண்டும். முதல் அடி 5 சீரிலும், இரண்டாவது அடி 7
சீரிலும் மூன்றாவது அடி 5 சீரிலும் அமைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழில்
எழுதப்பட்டுவரும் ஹைக்கூக்கள் இந்த இலக்கண விதிப்படி எழுதப்படவில்லை. மூன்று
வரி என்ற வரையறையை மட்டும் எடுத்துக்கொண்டனர். இரவியின் கவிதைகள் இதே
வரையறையைத்தான் கொண்டுள்ளன.
இரவியின் கவிதைகள் எளிமையாக இருப்பதே. அவர் கவிதை பரவலாக சென்றடைந்ததற்குக்
காரணம்.
தாய் இருக்க சேய் !
சேய் இருக்க தாய் !
சுனாமிக் கொலை.
என்ற கவிதையையும்,
உள்ளுரில் இனவெறி !
வெளிநாட்டில் நிறவெறி
உலக அமைதியே கேள்விக்குறி
என்ற கவிதையையும் உதாரணமாகச் சொல்லலாம். புரியாமல் எழுதினால் தான் கவிதை என்ற
சிந்தனை. இன்று நவீன எழுத்தாளர்கள் பலரிடம் உள்ளது. இந்தத் தாக்கத்திலிருந்து
விடுபட்டவர் ரவி. இவருடைய கவிதைக் களம் சமூகத்தின் நிகழ்காலப் பிரச்சனைகளை
கருவாகக் கொண்டுள்ளது.
இனிக்கவில்லை வாழ்க்கை
கரும்பு நட்டத்தில்
நட்டம்
என்ற விவசாய பிரச்சனைகளைப் பேசும் போதும்,
ஏமாற்றுவேலை
உலக அழகிப்போட்டி
ஓருத்தி மட்டுமா அழகா?
என்று அழகிப்போட்டிகள் அவல நிலை பற்றி எழுதும்போதும் இரவியின் சமூகப்பார்வை
வெளிப்படுகிறது. எளிமையாக எழுதவேண்டும், எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று
நினைத்து எழுதும் ரவியின் கவிதைகள் சில இடங்களில் கவிதை என்ற எல்லையை மீறி
உரைநடையாகவே தோன்றுகிறது. இந்த இலக்கிய விபத்தை இரவி தவிர்க்க வேண்டும்.
மின்சார சிக்கனம்
தேவை இக்கணம்
பகலிலும் எரியும் தெருவிளக்கு
போன்ற கவிதைகளை உதாரணமாகச் சொல்லாம். ஆங்கில வார்த்தை கலக்காமலும், இலக்கியப்
பகட்டு செய்யாமலும் எழுதப்பட்டதற்காக கவிதை வாசகர்கள் இந்நூலைப் படிக்கலாம்.
கணிமை.காம்
தமிழ்.கணிமை
BAPASI.COM








